சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள பெண்கள் அரசு கலைக் கல்லூரி அருகில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து துண்டு பிரசுரங்களை மாணவி வளர்மதி விநியோகித்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 13-ஆம் தேதி வளர்மதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், மாணவர்களைத் தூண்டிவிட்டு கிளர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதனையடுத்து வளர்மதி கோவை மத்திய சிறையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
இதனிடையே தனது மகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தந்தை மாதையன் ஆகஸ்ட் 2-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, சிறை நடைமுறைகள் முடிவடைந்து சிறையில் இருந்து வளர்மதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறைக்கு வெளியே அவரை ஏராளமான அமைப்பினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மக்கள் கொள்கைக்கு எதிராக செயல்படுபவர்கள் நக்சலைட்டுகளுக்கு சமமானவர்கள். இனி தொடர்ந்து, மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து போராடுவேன்".இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் அலுவலகத்திற்கு சென்று, மாணவி அனிதா மற்றும் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.