கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படும் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் இந்திய விடுதலைப்போர் உச்சத்தில் இருந்த போது ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1908-ம் ஆண்டு முதல் 1910 ம் ஆண்டு வரையிலான இரண்டாண்டுகள் கோவை மத்திய சிறையில் அவரை மாடுகள் இழுக்கும் செக்கை இழுக்க வைத்து ஆங்கிலேய அரசாங்கம் துன்புறுத்தியது.
பின்னர் சுதந்திரத்திற்கு பிறகு, கோவை மத்திய சிறை வளாகத்தில் அவர் இழுத்த செக்கு அரசு நினைவுச் சின்னமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் செக்கிற்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வ.உ.சி.,யின் 146 வது பிறந்த தினம் இன்று (செப்.,5) கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் அகில இந்திய வ.உ.சி. பேரவை அமைப்பினர் செக்கிற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல, சோழிய வேளாளர் சங்கம், கலை இலக்கிய பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் வ.உ.சி. இழுத்த செக்கிற்கும், அங்குள்ள அவரது திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, வ.உ.சி. நினைவாக கோவை காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய மேம்பாலத்திற்கு முன்பு வ.உ.சி.யின் சிலை அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், சட்டவிரோதமாக கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், சிறை வளாகத்தில் ஜாமர் கருவி விரைவில் பொருத்தப்படும் என்றும், கைதிகள் செல்போன் பயன்படுத்தப்படுகின்றனரா என்பதை சிறப்புக் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
குற்றவாளிகளுக்கு காவலர்கள் உதவி புரிகின்றனர் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த சிறைத்துறை எஸ்.பி., செந்தில்குமார், புகார் கூறப்படும் காவலர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், சிறையில் மருத்துவ வசதிகள் சிறப்பாக இருப்பதாகவும், பெரும்பாலும், சிறையில் ஏற்படும் கைதிகளின் உயிரிழப்புகள், மாரடைப்பு போன்ற காரணங்களால் மட்டுமே ஏற்படுவதாகவும், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, சிறையில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் சேவை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.