நீட் தேர்வால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால், அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் இந்த மரணம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் 5-வது நாளாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாணவி அனிதாவுக்கு நீதி கிடைக்க வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில், நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரி மாணவர்கள் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து இன்று (செப்.,5) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். போராட்டத்தை கைவிடுமாறு காவல் துறையினர் அவர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில், திரைப்பட இயக்கநர் கவுதமன் மற்றும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.

இதே போன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்ததனர். மத்திய, மாநில அரசுகள் தாமதப்படுத்தாமல் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வை விலக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.

சென்னையின் பரபரப்பான மவுண்ட் சாலையில் வரும் நந்தனம் ஒய்எம்சிஏ கல்லூரி மாணவர்களும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டக் களத்தில் இறங்கினர். மாணவர்கள் ஒன்று திரண்டால் மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்பதால் போராட்டத்தில் இறங்கியுள்ள மாணவர்கள் நீட் என்னும் கொடுந்தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்றனர்.
வேளச்சேரியில் உள்ள குருநாநக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தினுள்ளேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வுக்கு தடை விதிக்கும் வரை போராட்டம் ஓயாது என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பேரணியாக சென்ற மாணவர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிகிறது.