அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தியும் காந்திபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து மாணவர் கூட்டமைப்பைச் சார்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய மாநில அரசுகளே காரணம் எனக் கூறி கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே முற்போக்கு மாணவர்கள் கூட்டமைப்பினர் சார்பில் இன்ற சாலை மறியல் நடைபெற்றது. இந்த திடீர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் கோஷமிட்டு மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அருகில் இருந்த தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இந்த மறியல் போராட்டத்தினால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளை காவல்துறையினர் இழுத்துச் சென்றதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த பெண்கள் காவல்துறையினரை தடுக்க முயன்னர். இருப்பினும், போராடிய பெண்களை போலீசார் கைது செய்து தரதரவென சாலையில் இழுத்துச்சென்றனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.