2016-ம் ஆண்டு முடிந்த சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது. சென்ற ஆண்டு வரை உள்ளாட்சி தேர்தல் பதவியில் இருந்தவர்களின் 5 ஆண்டுகள் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி விட்டது.
கடந்த முறை போல இந்த முறையும் இரு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் தேதி கடந்த ஆண்டு (அக்டோபர் 17, 19) தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்தது. இதனால், இன்று வரை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகள் முடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் பல்வேறு குளறுபடிகள் நிலவி வருவதாலேயே உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடைபெறாமல் உள்ளது என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் உள்ள அந்தந்த மாநகராட்சி நிர்வாகமே தற்போது அனைத்து வார்டுகளையும் கண்காணித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள 100 வார்டுகளில் நிலவிவரும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை மாநகராட்சி நிர்வாகம் தீர்க்க முடியாமல் திணறி வருகிறது. கோவை, கவுண்டம்பாளையம் 6-வது வார்டுக்குட்பட்ட வி.கே.என் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு மற்றும் சாலை வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் இருந்தும் பயன்படாமலேயே உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இன்று வரை எவ்வித பலனும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்கின்றனர். அப்பகுதியில் சட்டமன்ற தேர்தலின் போது ஓட்டு கேட்டு வந்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி. ஆறுகுட்டி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இன்னும் இப்பகுதி மக்களை சந்திக்கவில்லை என்கின்றனர். அதிமுக-வில் ஏற்பட்டுள்ள பிளவால் எம்எல்ஏ-க்கள் எந்த அணி செல்வது என்பது குறித்து சிந்திக்க நேரம் செலவிடுவதால் மக்கள் நலனை காக்கத் தவறிவிட்டனர். பரபரப்பான அரசியலில் ஆட்சி அதிகாரம் மட்டும் பார்க்காமல் மக்களின் அடிப்படை பிரச்சனைகளையும் பார்க்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

6-வது வார்டு பகுதியில் நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து அப்பகுதி மக்கள் நமது சிம்ப்ளிசிட்டி நிருபரிடம் கூறியதாவது:- எங்கள் குடியிருப்பு பகுதிக்கு முன்பு குடிநீர் 12 நாட்களுக்கு ஒரு முறை வரும். ஆனால், கோடைக்காலம் முதல் இன்று வரை 20 நாட்களுக்கும் மேலாகியும் குடிநீர் வருவதில்லை. இதனால், அவசரத் தேவைக்காக குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. தெருவிளக்குகள் சரியான பராமரிப்பு இல்லாமல் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக எரிவதில்லை. இப்பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகம் இருப்பதால் இரவு நேரங்களில் தெருவிளக்கு இல்லாமலும், இப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை தெரு நாய்கள் துரத்துகிறது.

சாலை வசதிகள் இருந்தும் பயனில்லாமல் உள்ளது. சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வேலைப்பணிகள் முழுமைப் பெறாமல் இருப்பதால், மழைக் காலத்தில் சாலையில் களிமங்களால் சேரும், சகதியுமாய் உருமாறி இருசக்கர வாகனத்திலும், நடந்து வருபவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அருகில் பள்ளிக் கூடங்கள் இருப்பதாலும் மாணவர்கள் இப்பகுதியை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். குப்பை தொட்டிகள் இப்பகுதியில் அதிகம் இல்லாததால், ஆங்காங்கே குப்பைகளும் சிதறிக்கிடக்கின்றன.

துப்புரவு பணியாளர்கள் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீடுகளுக்கு வந்து குப்பையை சேகரிக்கின்றனர். இந்த பிரச்சனையை இப்பகுதி கவுன்சிலரான சரஸ்வதியிடம் கூறுகையில், தனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றார். எனவே, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் எங்கள் பகுதி பிரச்சனைகளை முறையிட உரிய அதிகாரிகள் இல்லை. ஆதலால் மாநகராட்சி நிர்வாகம் எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டனர்.