ஹோண்டா நிறுவனம் கோவை மாநகரக் காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து இதுநாள் வரை சுமார் 11,000 கோவை வாழ் மக்களிடம் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
கோவையில் சிறுவர்களுக்கான டிராபிக் பூங்கா அமைக்கப்பட்டதன் மூலமாக, ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கோவை மாநகரக் காவல்துறையினருடன் இணைந்து இது நாள் வரை சுமார் 11,000 கோவை வாழ் மக்களிடம் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கோவை சரக போக்குவரத்துத் துறையுடன் இணைந்து சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஓட்டுநர்களுக்கான வாகனங்களை கையாளுதல் மற்றும் சாலை விதிமுறைகளை மதித்து வாகனங்களை இயக்குதல் குறித்த பயிற்சி ஹோண்டா சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி மையம் மூலமாக வழங்கப்படுகிறது.
இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக சாலைப்பாதுகாப்பு குறியீடுகளை புரிந்து கொள்ளுதல், கட்டுப்பாடான வேகத்தில் வாகனங்களை இயக்குதல், போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மது போதையில் வாகனங்களை இயக்குதல் போன்றவை மற்றும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஹோண்டா சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வு இலவசமாக வாரத்தில் ஆறு நாள்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் அமைந்துள்ள சிறுவர் டிராபிக் பூங்காவில் நடைபெறுகிறது.
இது குறித்து, கோவை மாநகரக் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் கூறியதாவது:-
சாலையில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது அனைத்து குடிமக்களின் கடமை, ஹோண்டா நிறுவனத்தின் இலவச பயிற்சி மையம் மூலமாக அளிக்கும் சாலைப் பாதுகாப்பு குறித்த பயிற்சி வாகன ஓட்டுநர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், ஹோண்டா நிறுவனத்தின் சமூக மேம்பாட்டுக்கான இந்த முயற்சியை நான் பாராட்டுகிறேன் என்றார்.
இது குறித்து, கோவை சரக இணைப் போக்குவரத்து ஆணையர் பி.முருகானந்தம் கூறியதாவது:- உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகளின் படியும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையர் அவர்களின் அறிவுரையின் படியும் இருசக்கர வாகன விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் பொருட்டு, கோவை சரக போக்குவரத்துத் துறை அமல்படுத்தியுள்ள புதிய முறையில் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிப்போர் வாகனங்கள் இயக்கத் தகுந்த பயிற்சியை முறையாகப் பெற்று இருக்க வேண்டியது அவசியமாகிறது.
அதன்படி ஏற்கனவே, பழகுநர் உரிமம் பெற்றுள்ள ஒருவர் நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்துடன் சிறுவர் போக்குவரத்து பூங்காவில் கோவை மாநகரக் காவல்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை மற்றும் ஹோண்டா நிறுவனப் பயிற்சி மையம் இணைந்து நடத்தும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழை அவசியம் பெற்று, விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்குமாறு கோவை சரகத்தில் உள்ள கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இது குறித்து, ஹோண்டா நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் யத்விந்தர் சிங் குலாரியா கூறியதாவது:- பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குதல் ஹோண்டா நிறுவனம் கவனத்தைச் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மொத்தம் 13 லட்சம் பேரிடம் சாலைப்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.
மேலும், 11 டிராபிக் பூங்காக்களை உருவாக்கியுள்ளோம். கோவையில் மட்டும் 11,000 மக்களிடம் சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தருணத்தில் கோவை மாநகரக் காவல்துறைக்கும் போக்குவரத்துத் துறைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் பாதுகாப்பாகப் பயணம் செய்ய வேண்டும் என்பதே ஹோண்டா நிறுவனத்தின் லட்சியம் ஆகும் என்றார்.