வெள்ளலூர் குளம் வாய்க்காலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், குளக்கரையில் மிக அருகில் உள்ள வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து நடவடிக்கை கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு குளங்கள் மற்றும் நீர்நிலைகளை காக்கும் பணியில் கடந்த ஏழு மாதங்களாக ஈடுபட்டு வருகிறது. அந்த பணிகளின் பொழுது வெள்ளலூர் குளமும் சரிசெய்யப்பட்டது. ராஜவாய்க்கால் சரிசெய்யப்பட்டதால் கரையோரம் உள்ள வீடுகள் இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் சூழல் உள்ளது.
குளத்திற்கு நீர் வரும் வழித்தடம் தொடர்பாக 28.03.2017 அன்று தங்கள் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்ட கலந்தாய்வில் கலந்துகொண்டோம். அந்த கலந்தாய்வில் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியரால் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை பெய்து மழைநீரூம் சித்திரைச்சாவடி அணைக்கட்டை அடைந்துவிட்டது. மேலும் குறிச்சி குளத்தின் கரையோரத்தில் சாலை வசதி செய்வதற்காக தோண்டப்பட்ட மண் நீர்வரும் வழியில் அடைப்பு ஏற்படுத்தியுள்ளது. உக்கடம் குளத்திற்கு நீர்வரும் வழித்தடத்திலும் அடைப்புகள் உள்ளன. எனவே, போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், நீர்வழித்தடங்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுத்து நீர்நிலைகளை காக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
இவ்வாறு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.