ஈஷா அவுட்ரீச் சார்பாக ஈஷா யோகா மையத்தின் சுற்றுவட்டார கிராமங்களில் பொதுமக்களுக்கு நதிகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி, விவசாயம், மருத்துவம், சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி கிராமவாசிகளின் நலனை மேம்படுத்தும் ஈஷா அவுட்ரீச்சின் வழிக்காட்டுதலின் கீழ் ஊர்த்தலைவர்கள், இளைஞர்கள், தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து 'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' பேரணி பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே உருவாக்கி வருகின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் சுதந்திர தினத்தின் போது, இந்த கிராமங்களில் சுமார் 30 பள்ளிகளில் இனிப்புகள் விநியோகித்து, பள்ளிக் கூடத்தில் குழந்தைகளுக்கு நதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தன்னார்வத் தொண்டர்கள் வீடுவீடாகச் சென்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இப்பணிகளின் அடுத்த கட்டமாக, ஒரு இருசக்கர வாகன பேரணி 20 ஆகஸ்ட் அன்று (இன்று) நடத்தப்பட்டது. இப்பேரணியில் 'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' என்ற ஸ்டிக்கர்கள் மற்றும் கொடிகளுடன் சுமார் 150 இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் 18-யில் இருந்து 70 வயதிற்குட்பட்ட 300 பேர் கலந்துகொண்டனர். நரசிபுரம், தேவராயபுரம், சந்தேகவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 25 கிராமங்கள் வழியாக சுமார் 20 கிமீ தூரதிற்கு இப்பேரணி நடைபெற்றது.

தொடர்ந்து, கிராமங்களில் நீர்த்தேவையை வலியுறுத்தும் இதே போன்ற பேரணி ஆகஸ்ட் 26ம் தேதி இருட்டுப்பள்ளம், செம்மேடு, ஆலந்துறை வழியாக நடைபெற உள்ளது.

இப்பேரணியில் கலந்துகொள்பவர்கள் செப்டம்பர் 3ம் தேதி வ.ஊ.சி மைதானத்தில் சத்குரு முன்னிலையில் துவங்க உள்ள 'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
இதனைத்தொடர்ந்து, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு செப்டம்பர் 3ம் தேதி முதல் ஒருமாதத்திற்கு நதிகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடுமுழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 3ம் தேதி கோவையில் துவங்கும் இந்த விழிப்புணர்வு இயக்கம் 16 மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் சத்குரு தாமே சுமார் 7000 கிமீ வாகனம் ஓட்டி செல்வார். அவரோடு வழியில் பல தலைவர்களும், பிரபலங்களும் கலந்துகொள்வார்கள்.
தமிழகத்தில் கோவை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை போன்ற நகரங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும். நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் இவ்வியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.