சேலம் ரயில்நிலையத்தின் இரண்டாவது நுழைவு வாயில் வரை நீட்டிக்கப்பட்ட நடைமேம்பாலம், சேலம் ரயில்நிலையத்தில் முதல் நடைமேடை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள நிலைய மேலாளர் அறை மற்றும் முக்கிய விருந்தினர் அறை, சாமல்பட்டி ரயில்நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலம், ஆகியவற்றை இன்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு புதுதில்லியில் இருந்து காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சேலம் ரயில்நிலையத்தின் இரண்டாவது நுழைவு வாயில் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நடைமேம்பாலம்:
தற்போதுள்ள சேலம் ரயில் நிலைய முக்கிய நுழைவு வாயில் அதிகரித்துள்ள வாகனம் மற்றும் பயணிகள் எண்ணிக்கையால் மிக நெரிசலாக காணப்படுகிறது. எனவே, இந்த நெரிசலை குறைக்க சேலம் ரயில்நிலையத்தின் மேற்குப்புற நுழைவு வாயில் மேம்படுத்தப்பட உள்ளது. எனவே, பயணிகள் பின்புறம் இருந்து முன்புறம் மற்றும் முன்புறம் இருந்து பின்புறம் எளிதாக செல்ல வசதியாக தற்போது நடைமேடை எண்கள் 1,2,3,4 மற்றும் 5ஐ இணைத்துள்ள நடைமேம்பாலம் இரண்டாது நுழைவு வாயில் வரை சுமார் 1 கோடி ரூபாய் செலவில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் ரயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவு வாயில் மேம்பாட்டுப் பணிகள் விரைவாக மேற்கொள்ள வசதியாக இருக்கும்.
சேலம் ரயில்நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள முக்கிய விருந்தினர் அறை:
சேலம் ரயில்நிலையத்திற்கு வருகை தரும் முக்கிய விருந்தினர்களை வரவேற்று அமர வைக்க வசதியாக குளிர்வசதி செய்யப்பட்ட அறை நடைமேடை எண், 1ன் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 12 பேர் வசதியாக அமர முடியும். இந்த அறை தற்போது மாற்றப்பட்டுள்ள நிலைய மேலாளர் அறை அருகில் இருப்பதால் முக்கிய விருந்தினர்களை எளிதாக வரவேற்க மற்றும் வழியனுப்ப வசதியாக இருக்கும்.
சாமல்பட்டி ரயில்நிலையத்தில் புதிய நடைமேம்பாலம்:
ஜோலார்பேட்டை சேலம் மார்க்கத்தில் உள்ள சாமல்பட்டி ரயில்நிலையம் முக்கிய ரயில்நிலையங்களில் ஒன்றாகும். இங்கு 5 விரைவு ரயில்களும் 6 பயணிகள் ரயில்களும் நின்று செல்கிறன்றன. நடைமேடை எண் 1 மற்றும் 2 இடையே பயணிகள் செல்ல மிக கடினமாக இருந்ததால் தற்போது புதிய நடைமேம்பாலம் சுமார் 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில், சேலம் பாராளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், சேலம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சந்திரபால், சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் பெருமாள் நந்தலால், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஏ.விஜுவின், சேலம் கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஏ.சி.முருகேசன் மற்றும் சேலம் கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ரயில்பயணிகள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில், காணொளிக்காட்சி மூலம் உரையாற்றிய சுரேஷ் பிரபு; ரயில்வே அமைச்சகம் தற்போது தமிழகத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகளை மேம்படுத்தி வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், மேலும் பல வசதிகள் செய்யப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். விழாவில் பங்கேற்றமைக்கு தமிழக பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

விழாவில், பேசிய பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம் அவர்கள் சேலம் ரயில் நிலையத்தில் செய்யப்பட்டு வரும் பல்வேறு மேம்பாடுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், மேலும் பல்வேறு மேம்பாடுகள் செய்யுமாறு சேலம் கோட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் ஏபி சக்திவேல் அவர்கள் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் இரு நடை மேம்பாலங்கள் நிறுவியுள்ளதற்கு சேலம் கோட்ட நிர்வாகத்தை பாராட்டினார்.