கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோல் கான் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், சட்டம் ஒழுங்கு காவல் துறை துணை ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர், இணை வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் 2016 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட வைப்புத் தொகையினை உடன் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு வழங்க தெரிவிக்கப்பட்டது.
மேலும், தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் பழுதுகள் ஏதேனும் இருப்பின் உரிய முறையில் பழுது பார்த்து தயார் நிலையில் வைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மற்றும் புகார்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்து தீர்வு காண மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார்.
கோவை மாவட்டத்தில் எஸ்ஆர்பி அம்மணி அம்மாள் மேல் நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம் மற்றும் பள்ளப்பாளையம் பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் காவல் துறை பாதுகாப்புடன் உள்ளாட்சித் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையும், மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு செய்தார்.