கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் மாக்கினாம்பட்டி நடு வீதி, ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சி பக்கோதிபாளையம், மற்றும் ஜமீன்முத்தூர் கிராமம், மன்னூர் ஊராட்சியில் வெள்ளேகவுண்டன் புதூர், அறிவொளி நகர் ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் இன்று டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகளை ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாதாரத்துறை, வருவாய்த்துறை ஆகிய அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:- காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிப்பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் துறை உயர் அலுவலர்கள் மூலம் திடீர் ஆய்வுகளும் மேற்கொள்ளபடுகின்றது.
அதன்படி இன்று மாக்கினாம்பட்டி நடு வீதி, ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சியில் பக்கோதிபாளையம் மற்றும் ஜமீன்முத்தூர் ஊராட்சி, மன்னூர் ஊராட்சியில் வெள்ளேகவுண்டன் புதூர், அறிஒளி நகர் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப்பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாக்கினாம்பட்டி ஊராட்சியிலுள்ள நேரு நகர், வைகை நகர் ஆகிய பகுதிகளில் பொதுசுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை கொண்டு இரண்டு குழுக்களாக பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
பொது இடங்களில் கொசு உற்பத்தியை குறைத்து அதன் மூலம் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் கொசு உற்பத்தியினை தடுக்கும் நடவடிக்கையாக புகை மருந்து மூலம் கொசுக்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி, தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை சுத்தம் செய்து தொற்று நோய் பரவா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். பெரிய நீர்பிடிப்பு தொட்டிகளில் கம்பூசியா வகை மீன்களை விடுவதன் மூலம் கொசுப்புழு உற்பத்தியாவதை தடுக்கலாம். பொதுமக்கள் தங்கள் வீட்டினுள் தண்ணீரில் கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். வீட்டினருகே, பயன்படாத சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர் தொட்டி, ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், வாளி, பிளாஸ்டிக் தட்டுகள், டயர்கள், திறந்த கிணறு போன்றவற்றினை நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி சுகாதாரத்தினை பேணிக்காக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.
தொடர்ந்து ஜமீன்முத்தூர் ஊராட்சி, வெள்ளேகவுண்டன் புதூர், வீடு வீடாக சென்று சுகாதார பணிகளை மேற்பார்வையிட்டு குடிநீர் மாதிரிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சோதனையிட்டார்.
இக்கூட்டத்தில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்மாவதி, வட்டார மருத்துவர் சகுந்தலா தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரகுமார், விஜயகுமார், சம்பத்குமார், பொள்ளாச்சி வட்டாட்சியர் செல்வி மற்றும் பொதுசுகாதார அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.