கோவை, புலியகுளம் புனித அந்தோணியார் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் 1976ம் ஆண்டு 11ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நேற்று மாலை ஸ்டேட் பேங்கு ரோடு, ஆர்.எச்.ஆர் பில்டிங் வளாகத்திலுள்ள தாய் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில், 1976ம் ஆண்டு புலியகுளம் புனித அந்தோணியார் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் சந்தித்தனர்.

41 ஆண்டுகளுக்கு பின்னர் பல்வேறு அரசு மற்றும் பிற துறைகளில் பணியாற்றும், மற்றும் நிறுவனங்களை நடத்தும் 35க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், ஓமன் போன்ற வெளி நாடுகளிலிருந்தும், மும்பை, கொச்சி, மூணாறு, பெங்களூரு முதலான வெளியூர் மாநிலங்களிலும், மற்றும் நாமக்கல், ஈரோடு போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பங்கேற்று தங்கள் பள்ளியில் நிகழ்ந்த சம்பவங்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

அதேசமயம் இக்கூட்டத்தில், அந்தோணி முன்னாள் மாணவர்கள் சங்கம் தலைவராக வர்கீஸ் எஸ். தாமஸ், துணை தலைவராக எம்.ஜேசுதாஸ், செயலாளராக ஏ.மனோஜ், உதவி செயலராக சி.சுந்தர் ராஜ் மற்றும் பொருளாளராக கே.கணேசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும், இந்தியாவில் அனைத்து வகையான கல்வியையும் இலவசமாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் முன்னாள் மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வினை ஏ.மனோஜ் ஒருங்கிணைத்தார்.
