கோவை மண்டல வனத்துறையின் சார்பாக உலக யானைகள் தின விழா வனக்கல்லூரியில் இன்று நடைபெற்றது. உலக அளவில் 4 லட்சம் யானைகளும், இந்தியாவில் 40,000 யானைகள் இருப்பதாகவும், மேற்கு மலைத் தொடர்ச்சியின் முக்கிய பகுதியான தமிழகத்தில் 2,500 யானைகள் இருப்பதால் தான் முதன் முறையாக கோவை மண்டலத்தில் யானைகள் தின விழா கொண்டாடப்படுவதாக தெரிவித்தனர்.
முன்னதாக, நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் யானைகளின் முக்கியதுவத்தையும், அவற்றை பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியும் 'யானைகளை காப்போம்' என்ற முழக்கத்துடன் பேரணியாக சென்றனர்.

பின்னர், நிகழ்ச்சியில் முதன்மை வனத்துறை அதிகாரி இராமசுப்பிரமணியன் பேசுகையில்,யானைகள் களிறு திட்டம் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 1.38 கோடி ஒதுக்கப்பட்டு பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. யானைகள் வந்தால் விவசாயிகளுக்கு அவசர அழைப்புக்கு புதிய எண் வழங்கப்பட்டுள்ளது. இரு வாகனங்கள் அதி விரைவு தடுப்பு குழுவிற்கு பிரத்யேகமாக வழங்கப்பட்டு இருப்பதாகவும், யானைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து 180042545456 என்ற ஹெல்ப் லைன் எண்ணில் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பிரண்ட்ஸ் ஆப் பாரஸ்ட் திட்டத்தின் கீழ் கோவையில் 25 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், வனத்துறையின் சில இடங்களுக்கு பிரண்ட்ஸ் ஆப் பாரஸ்ட்டில் உள்ளவர்களுக்கு வனம் சமபந்தப்பட்ட கல்வி கொடுக்கப்பட இருப்பதாகவும், சூழல் சுற்றுலா மூலம் ஐந்து இடங்களில் நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் மக்களுக்கும் வனத்துறைக்கும் இடையே புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இருக்கும். இதன் மூலம் யானை மனித மோதல்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கைகள் துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட இத்திட்டம் வழி வகுக்கும் என முதன்மை வன பாதுகாவலர் இராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு சீருடை மற்றும் காலனி வழங்கப்பட்டது. வேட்டைத்தடுப்பு காவலர்கள் 147 பேருக்கு ஒரு லட்ச ரூபாய்க்காண மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் வனக்குழுத் தலைவர்களுக்கு டார்ச் லைட் வழங்கப்பட்டது. பாம்புகளை எளிதாக பிடிக்கும் வகையில் உபகரணங்களும் அளிக்கப்பட்டது.