மதுரை மாவட்டம் மேலூரில் டி.டி.வி தினகரன் நடத்தும் பொது கூட்டத்தில் கலந்து கொள்ளவதா வேண்டாமா என்பது குறித்து முதல்வரிடம் கேட்டு முடிவு செய்யப்படும் என கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள உதகை செல்ல வந்த கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூட்டுறவு துறையின் செயல்பாடுகளை அனைத்து தரப்பினரும் பாராட்டுவதாக தெரிவித்தார். அதிமுக கட்சியானது பல்வேறு சோதனைகளை கடந்து வந்த கட்சி எனவும், அதுபோல தற்போதைய சோதனைகளையும் கடந்து விரைவில் ஒன்றுபடும் எனவும் தெரிவித்தார். இரட்டை இலை சின்னத்துடன் மக்களை சந்திக்கும் காலம் விரைவில் வரும் என தெரிவித்த அவர், அதிமுக தொண்டர்கள் குழம்பவில்லை எனவும் அதிமுக எம்.எல்.ஏ யாரும் மாற்று கட்சிக்கு அணி மாறவில்லை என்றவர் அனைவரும் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், மேலூரில் டி.டி.வி தினகரன் நடத்தும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொது கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கின்றதா என்பதை தற்போது சொல்ல முடியாது என கூறியவர் முதல்வரிடம் இது குறித்து கேட்டு முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். கட்சி ஒன்றுபட வேண்டும் என்பதே தங்கள் எண்ணம் எனவும், சிலர் கோபதாபங்களில் பேசுவதை பெரிதாக்க கூடாது எனவும் தெரிவித்தார். குழப்பம் விளைவிப்பதில் அப்பாவிற்கு தப்பாத பிள்ளையாக ஸ்டாலின் செயல்படுகின்றார் எனவும் எதிர்கட்சி தலைவராக செய்ய வேண்டியதை அவர் செய்கின்றார் எனவும் தெரிவித்தவர், நடிகர் கமல் பொதுவானவர் எனவும் அவர் வழி தவறி செல்வதை விரைவில் உணர்வார் என தெரிவித்தார். கமல் தனியாக கட்சி ஆரம்பித்தால் அவருக்கு பதில் சொல்லபடும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். நாட்டு மக்கள் குழம்ப வேண்டாம், நிச்சயம் அதிமுக ஒன்றிணையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.