கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அரசு மணல் குவாரிகளில், பயன்படுத்தப்படும் வாகனங்களின் ஆவணங்களை சரிபார்க்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசின் மணல் இணைய சேவையில் மேற்கொள்ளப்படும் வாகனப் பதிவுகளில் எழும் முறைகேடான பதிவுகளை தவிர்க்கும் பொருட்டு வாகன ஆவணங்களை சரிபார்த்தலுக்கான சிறப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 7) முதல் வரும் 11-ம் தேதி வரை காலை 10 மணிமுதல் மாலை 5.30 மணி வரை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது.
வாகன உரிமையாளர்கள் www.tnsand.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் வாகனத்தில் நடப்பில் உள்ள வாகன பதிவு புத்தகம், வாகன அனுமதிச் சான்று வாகன தகுதிச் சான்று சாலை வரி ரசீது மற்றும் காப்பீட்டு விவரங்கள் ஆகியவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்து, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் படிவத்துடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம். பதிவேற்றிய மேற்காணும் ஆவணங்களுக்கான நகல்களுடன் சிறப்பு முகாமில் காண்பித்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
இம்முகாமானது வாகன தரவுகளை ஒழுங்குபடுத்த நடைபெறுகின்றது. இம்முகாமிற்கு வாகனங்களை கொண்டு வரவேண்டாம். முகாமில் வாகனங்கள் சரிபார்க்கும் வாகனங்கள் மட்டுமே இணையதள மணல் சேவையினை பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும், தவறான ஆவணங்கள் கொண்ட வாகனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.
இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிசந்திரன், செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற் பொறியாளர்கள் செந்தில்குமார், புவனேஷ்வரி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உதயகுமார், பால்ராஜ், கார்த்திகேயன், போக்குவரத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உட்பட லாரி உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.