மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், கால்நடை சிகிச்சை மையங்கள், ஆய்வகங்கள் ஆகியவற்றிலிருந்து மனித, கால்நடை கழிவுகள், சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட பஞ்சு மற்றும் துணிகள், காலாவதியான மருந்துகள் உள்ளிட்டவை கழிவுகளாக நாள்தோறும் வெளியேற்றப்படுகின்றன.
மாநிலம் முழுவதும் இவ்வாறு வெளியேறும் மருத்துவக் கழிவுகளை அழிக்கும் வகையில் மாநகராட்சி சார்பிலும் திடக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இல்லையெனில், மருத்துவமனைகளில் சேகரமாகும் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துகளை ஆழமான குழியில் புதைக்க வேண்டும்.
காலாவதியான மருந்துகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை குறிப்பிடப்பட்ட முறையில் வெப்ப உலையில் இட்டு அழிக்கும்போது ஏற்படும் சாம்பலையும் மாநகராட்சி அல்லது நகராட்சி கழிவு உரக்கிடங்கில் ஆழமாகக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த எச்சரிக்கைகள் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று பொதுமக்கள் மட்டுமல்ல நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அதிகாரிகளும் அரியாத ஒன்று.
கோவையைப் பொருத்தவரையில் அண்டை மாவட்ட, மாநிலங்களின் மருத்துவம் சம்பந்தப்பட்ட கழிவுகளை கொட்டும் குப்பைக் கிடங்காகவே மாறிவருகிறது நம் கோவை. சமீபத்தில் கேரளாவில் இருந்து தமிழக எல்லையான கோவை மதுக்கரையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறினாலும் தற்போதும் கோவையில் பல்வேறு பகுதிகளில் பெரயளவிலான மருத்துவக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டிக்கிடப்பதை நம்மால் காணமுடிகிறது.
இதுபோன்ற சம்பவமே தற்போது கோவை முத்தனன் குளத்திலும் நடைபெற்றுள்ளது. பெட்டி பெட்டியாக குழந்தைகளில் மருந்துகள், மாத்திரைகள் என ஏராளமாக கொட்டப்பட்டுள்ளன. இதுதொடர்பான அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

சீர்கெடும் நீர்நிலைகள்:-
போதிய மழையின்மை, வறட்சி, ஆக்கிரமிப்பு உள்ளிட்டு பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித்தவித்து வரும் நீர்நிலைகளை மீட்கும் பணியில் தற்போது கோவையில் பல்வேறு தன்னார்வலர் அமைப்பினர் நீர்நிலைகள், குளங்கள் உள்ளிட்டவற்றை சீரமைத்து வருகின்றனர். பருவ மழை துவங்கும் பட்சத்தில் இவை நிரம்பி மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனிடையே, குளங்களில் இதுபோன்ற மருத்துவக் கழிவுகளை கொட்டுவதால் மேலும் அந்தக் குளம் சீர்கேட்டிற்கு உள்ளாகிறது. சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது என தன்னார்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.