ஒவ்வொரு திட்டத்திலும் தொடர்ந்து மக்களை வஞ்சித்து வரும் மத்திய அரசு தற்போது புதிதாக ஒரு மக்கள் விரோதத் திட்டத்தை அமல்படுத்தியிருப்பது நாட்டு மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது, இன்று மத்திய பாஜக மதவாத அரசு நிறைவேற்றியிருக்கும் புதிய திட்டம் எரிவாயு சிலின்டர்களுக்கான விலையை பெட்ரோலிய நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதியளித்திருப்பது, சிலின்டருக்கான விலையில் மாதம் தோறும் விலேயேற்றம், அடுத்த வருடம் முதல் அரசு வழங்கிவரும் சிலின்டருக்கான மானியம் ரத்து ஆகியவை ஆகும். மேலும், குடும்பத்தில் ஒருநபர் வருமான வரி கட்டினால் இனி ரேசனில் எந்த பொருளும் வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மானிய சுமையை குறைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே மாதந்தோறும் 4 ரூபாய் என்ற அடிப்படையில் உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அனைத்து மானியங்களும் ரத்து செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
ரேஷன் கடைகளில் செயல்படுத்தப்படும் பொது விநியோக திட்டம் மூலம் அனைவருக்குமான உணவு பாதுகாப்பினை தமிழக அரசு வழங்கிவருகிறது. எனவே, அனைத்துத் தரப்பினரும் வழக்கம்போல ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்கலாம். ரேஷன் பொருள்கள் வாங்குவதில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.
மத்திய அரசின் திட்டமான, தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தை கடைசியாக செயல்படுத்தியது தமிழ்நாடு. அது மத்திய அரசு கொண்டு வந்த திட்டம். சில நிபந்தனைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்ட பின்னர்தான் உணவு பாதுகாப்புத் திட்டத்தை தமிழகத்தில் ஏற்றோம். எனவே, அது குறித்து வெளியிடப்படும் அறிவிப்புகள் தமிழக அரசிதழில் வந்தாலும் அது நடைமுறைக்குக் கொண்டுவரப்படாது.
பழைய விலையிலேயே ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்கள் வழங்கப்படும். விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் என இரண்டு திட்டங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அரசிதழில் சட்டத்திட்டங்கள் விதிக்கப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருள்களில் எந்த மாற்றமும் இருக்காது' என்று விளக்கினார்.