கோவை வெள்ளளூரில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் குப்பைகள் தொடந்து எரிந்து வருகின்றது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தீயணை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவையை அடுத்த வெள்ளளூரில் மாநகராட்சி குப்பை கிடங்கு செயல்பட்டு வருகின்றது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குப்பை கிடங்கின் ஓரு பகுதியில் இன்று மாலை 5.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ வேகமாக பரவி குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் முழுமையாக கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் வெள்ளளூர் பகுதியில் கடுமையாக புகைமூட்டம் நிலவியது.

இதனையடுத்து, அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் இரண்டு மணி நேரத்திக்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவியாக வெள்ளூர் பகுதியில் உள்ள ஆர்.ஏ.எப் படை வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 தினங்களாகவே இந்த குப்பை கிடங்கில் தீ பிடிப்பதும் அதை தீயணைப்பு துறையினரும் மாநகராட்சி அலுவலர்கள் வந்து அணைப்பதுமாக இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று மாலை மீண்டும் குப்பை கிடங்கில் தீப்பிடித்ததால் அருகில் உள்ள பொதுமக்கள் புகை மூட்டத்தால் அவதிக்குள்ளாகினர். மாநகராட்சி அலுவலர்களின் அலட்சியத்தால் இது போன்று குப்பை கிடங்கில் தீப்பிடிப்பது வாடிக்கையாகிவிட்டதாக வெள்ளளூர் பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.