விட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தனது 4 சென்ட் அளவிலான விட்டுமனைக்கு பட்டா கேட்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து வந்துள்ளார். கடந்த 2017 செப்டம்பர் மாதம் மாவட்ட ஆட்சியராக அர்ச்சனா பட்நாயக் இருந்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தின் போது சரவணக்குமார் தன் உடலின் மீது மண்ணெண்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை மீட்டு விசாரணைக்குப் பின் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.

இந்நிலையில், தற்போது வரை வீட்டுமனைக்கான பட்டா வழங்கப்படாததைக் கண்டித்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தாய் அங்காத்தால், மனைவி அன்னபூரணி மற்றும் குழந்தைகளுடன் வந்த சரவணக்குமார் தங்களது உடலின் மீது மண்ணெண்னையினை ஊற்றி திக்குளிக்க முயற்சி செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அனைவரையும் மீட்டனர். தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.