சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் வகையில் ஆவணி அவிட்டம் நாளான்று நடைபெறும் பூணூல் அணியும் விழாவை தடை செய்யக்கோரி, வருகின்ற ஆகஸ்ட் 7 ம் தேதியன்று பன்றிக்கு பூணூல் அணியும் போராட்டம் நடத்தப்படுமென தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் வகையில் ஆவணி அவிட்டம் நாளன்று நடைபெறும் பூணூல் அணியும் விழாவை தடை செய்யக்கோரி வருகின்ற ஆகஸ்ட் 7-ம் தேதியன்று சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி முன்பு பன்றிக்கு பூணூல் அணியும் போராட்டம் நடத்தப்படுமென தீர்மானிக்கப்பட்டது.
மேலும், மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப்படி வங்கிகளில் தமிழ் மொழியில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கவில்லை எனில் வங்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும், நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி வருகின்ற 27-ம் தேதி திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு எடுக்கப்பட்டது.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி, வளர்மதி உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.