கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் முழுமையாக குணப்படுத்தக் கூடிய இந்த காய்ச்சல் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், டெங்குவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம் சேவூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (10). இவருக்கு கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்துள்ளது. தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவருக்கு காய்ச்சல் குணமடையவில்லை. தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரின் இரத்த மாதிரிகளை எடுத்த மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பிரவீனுக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து தனி வார்டில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 14-ம் தேதியன்று பிரவீன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மக்களிடையே டெங்கு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே இந்த மரணத்திற்கு காரணம் என்றும், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை மக்கள் அணுக வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.