பணப்பாளையம்புதூரில் ஆழ் குழாய் கிணறு அமைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்ப அட்டையை திருப்பி அளிக்க போவதாக அப்பகுதி பொதுமக்கள் எச்சரித்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா பணப்பாளையம்புதூர், செம்மனாம்பாளையம் மற்றும் அருகில் வசித்து வரும் 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்தனர்.
அதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளியங்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறோம். அத்திகடவு சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் நீரை இந்த பகுதி மக்கள் உபயோகித்து வந்தோம். தற்போது தாங்கள் வசித்து வரும் பகுதியின் அருகே சிலர் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருவதால் மேற்குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. உடனடியாக இப்பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தங்களது குடும்ப அட்டைகளை திருப்பிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

இதேபோல் தண்ணீர் திருட்டால் விவசாயம் அழிந்து வருவதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாகக் கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.