கோயமுத்தூர் பி.ஆர்.எஸ் மைதானத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள சிறுவர்கள் தவறான வழியில் செல்வதை தடுக்கும் வகையிலும், சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும் செயல்படுத்தப்படும் காவல் சிறுவர், சிறுமியர் மன்ற திட்டத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற சிறுவர்களுக்கு கோவை மாநகர காவல்துறை சார்பில் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பரிசுகள் வழங்கினார். அருகில் மாநகர துணை ஆணையர் லட்சுமி மற்றும் காவல்துறையினர் உள்பட பலர் உள்ளனர்.
கோவை குனியமுத்தூர், இரத்தினபுரி காவல் நிலையம் மொத்தம் 13 மாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்கள் வசிக்கும் இடத்தில் காவல் சிறுவர், சிறுமியர் மன்றம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மன்றத்திலும் விளையாட்டு பயிற்சியாளர்கள், பாதுகாவலர் என இரு பணியாளர்கள் மாணவர்களுக்கான பயிற்சி, அவர்களுக்கான உபகரணங்களை பாதுகாக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசின் நிதி உதவி மூலம் செயல்படும் இந்த மன்ற திட்டத்தின் மூலம் தற்போது 300 சிறுவர்கள், 200 சிறுமியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்தாண்டு முதல் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ள இந்த திட்டம் மூலம் தனி மனித ஒழுக்கம், நாட்டுப்பற்று, பொது அறிவு உள்ளிட்ட மனதை ஒரு நிலைப்படுத்தும் பயிற்சிகள் மட்டுமின்றி உடல் ரீதியான பயிற்சிகளான விளையாட்டுகளும், பாரம்பரிய கலைகளும் பயிற்றுவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக மன்றத்தில் பயிற்சி பெற்று வரும் சிறுவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதற்கான பரிசளிப்பு விழாவில் மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட நகரின் காவல்துறை அதிகாரிகள் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பேச்சு அளித்தனர். அப்போது அவர், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு வழங்கப்படும் இந்த திட்டம் திறமைகளை வளர்த்துக்கொள்ள மட்டுமின்றி எட்டாக்கனியாக உள்ள வெளி உலக அறிவையும், கலைகளையும் இலவசமாக கிடைப்பதால் வாழ்க்கையில் மேம்படவும், குறிப்பாக சிறுமிகளுக்கு பாதுகாக்கவும் இருப்பதாக கூறுகின்றனர்.