கோவை சித்ரா பகுதியில் தென்னிந்திய திருச்சபை நடத்தும் பெண்கள் மேம்பாட்டு வாழ்வியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த 1992-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த கல்லூரி அமைந்துள்ள இடம் தொழில் வணிகத்துறைக்கு சொந்தமானது.

இந்த நிலையில், சாலை மேம்பாட்டுக்காக இந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று கூறி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தொழில் வணிகத்துறையினர் மற்றும் போலீசார் திரண்டனர். அப்போது, முறையான நோட்டீஸ் வழங்காமல் கட்டிடத்தை இடிக்க அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி திருச்சபையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, 2 நாட்கள் அவகாசம் தருவதாக அதிகாரிகள் கூறிச்சென்றனர்.

இதனிடையே, கட்டிடத்தை நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தும் நேரத்தில் எங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று திருச்சபையினர் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திருச்சபையினர் இந்த இடத்தில் தொழில் நிறுவனம் தொடங்குவதாக அரசிடமிருந்து நிலத்தை பெற்றுள்ளனர். ஆனால், தொழில் நிறுவனம் நடத்தாமல் பூட்டி இருந்ததால் தொழில் வணிகத்துறையினர் அந்த இடத்தை கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதன் பேரில் தான் இன்று நெடுஞ்சாலைத்துறையினர் அந்த இடத்தை கையகப்படுத்த சென்றோம். குறிப்பிட்ட இடத்தில் ரவுண்டான அமைக்க அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது' என்றார்.