கோவை- சத்தி சாலையில் விரிவாக்கப்பணிகள் கடந்த சில மாதங்களுக்கு மன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்காக இந்த சாலையில் வெட்டப்பட இருந்த மரங்களில் பலவற்றை ஓசை சையது தலைமையிலான தன்னார்வலர்கள் வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.

இதில், வேப்பமரம், அரசமரம், புங்கை, பூவரசு உள்ளிட்ட பல்வேறு வகையான நம் மண்ணின் மரங்கள் அடங்கும். இந்த மரங்களின் மீது, ‘சரி’ (டிக்) குறியீடு வரையப்பட்டுள்ளது. இந்த மரங்களை, அப்பகுதியில் இருக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசின் பொது ஒதுக்கீட்டு நிலங்களின் மறு நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அதே பகுதியில் அமைந்துள்ள பூங்கா-வின் ஒரு பகுதியில் மறுநடவு செய்யப்படும் மரங்களைக் கொண்டு மரங்களுக்கான பூங்கா அமைக்க மாநகராட்சியுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்று அனுமதி பெறப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, இன்று (ஜூலை 3) சத்தியமங்கலம் சாலை சரவணம்பட்டி பகுதியில் மரங்களுக்கு மறுவாழ்வுப் பணி நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தண்ணீர் வசதியுடன் கூடிய மாநகராட்சி ரிசர்வ் சைட்களை மறுநடவு செய்யப்படும் மரங்களுக்காக ஒதுக்கினார்.
மேலும், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நடைபெற்ற அரச மரம் மறுநடவு செய்யும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு துவக்கி வைத்தார்.