ஜிஎஸ்டி வரி விதிப்பால் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி அடையும் என மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு கோவையில் பேட்டியளித்தார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையில் ஜிஎஸ்டி விளக்கக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு தொழில்துறையினருடன் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதின் மூலம், வரி விதிப்பு எளிமையாக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர்கள் அதிகரிக்கக் கூடும். வேலைவாய்ப்பு அதிகரிக்கக் கூடும். வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்தும் வரிகள் குறித்து முழுவதும் தெரிந்துகொள்ளும் வகையில் ஜிஎஸ்டி வரி உள்ளது. ஜிஎஸ்டி-யால் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள்.
தற்போது நாட்டின் ஜிடிபி வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நாட்டின் ஜிடிபி மேலும் வளர்ச்சி அடையும். அதிக வரிகள் நாட்டிற்கு கிடைப்பதன் மூலம், கல்வி போன்ற மக்கள் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தலாம். தொழில்துறையினரின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது. அவர்களின் கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சரிடம் பரிந்துரை செய்யவுள்ளேன்" என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, கோவை 100 அடி சாலையில் அமைந்துள்ள வானதி ஸ்ரீனிவாசனின் மக்கள் சேவை மையத்தில், இலவச ஜிஎஸ்டி பதிவு மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு ஜிஎஸ்டி பதிவு மையத்தினை திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், தமிழர்களிடம் ஜிஎஸ்டி குறித்து விளக்கம் அளிக்க வந்துள்ளேன். ஜிஎஸ்டி மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். ஊழல் ஒழியும். ஜிஎஸ்டி மூலம் சிறு, குறு தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள்.
பெட்ரோல் மற்றும் டீசல், ஜிஎஸ்டி வரி விதிப்பினுள் வருவது குறித்து ஜிஎஸ்டி ஆலோனை குழு தான் முடிவு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி-யால் ரயில்வே கட்டணத்தில் மாற்றம் இருக்குமா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, மத்திய அரசின் கீழே ரயில்வே துறை இயங்குகிறது. மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படும் என தெரிவித்தார்.
ரயில்வே துறை மேம்பாட்டிற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக 3.75 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மேம்பாட்டு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சிறு, குறு தொழில்துறையினர் பயனடைந்து வருகின்றனர். ரயில் நிலையங்களில் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரசனைகளை சரி செய்வது அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பு" என சுரேஷ் பிரபாகர் பிரபு தெரிவித்தார்.