தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் பிழைகள் நீக்கும் பொருட்டு ஜூலை மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது.
இந்த சிறப்புப் பணியை அனைத்து மாநிலங்களிலும் தொடங்கி "எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டுவிடக்கூடாது" என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் கருப்பொருளுக்கிணங்க அதிகளவில் இளைய வாக்காளர்களை குறிப்பாக 18- 21 வயதுக் குழுமத்தைச் சார்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தற்போது நடைபெறும் தொடர் திருத்தக் காலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது.
ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை நடைபெறும் இச்சிறப்புப் பணியின் போது வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் படிவங்களைச் சமர்ப்பிக்கலாம். அஞ்சல் மூலமும் படிவங்களை அனுப்பலாம். www.election.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் இ-சேவை மையங்களின் மூலமும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், ஜூலை 9 மற்றும் 23ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து நிரப்பப்பட்ட படிவங்களை பெறுவர்.
இவ்வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.