கோவை மாவட்டம், காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிஜிலு. இவரது மனைவி இந்து. இவர்கள் அதேப் பகுதியில் வீடு கட்டுவதற்காக தனியாரிடம் கடன் பெற்றுள்ளனர். இதில், முழுமையாக கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிஜிலு-விற்கு கடனுதவி அளித்தவர் குண்டர்கள் மூலம் கடந்த மாதம் பிஜிலுவின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பிஜிலு மற்றும் அவரது மனைவி இந்து சரவணம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நிலையில் காவல்துறையினர் இந்த தமிபதியினர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து, ஜாமீனில் வெளியே வந்த இந்த தம்பதியினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து, பிஜிலு, இந்து தம்பதியினர் கூறுகையில், நாங்கள் வீடுகட்ட கடன் அளித்த நபர் தற்போது குண்டர்கள் உதவியுடன் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இதுகுறித்து சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாலர் ராஜ்குமாரிடம் புகார் அளித்த நிலையில் அவர் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டார். மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.
முன்னதாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.