பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டித் தருகின்றோம் எனக் கூறி கோவையில் அப்பாவி மக்களிடம் 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்யும் பாஜக-வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை, தமிழ் புலிகள், எஸ்டிபிஐ உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு விடு இல்லாத மக்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், அதற்குப் பின்பு இத்திட்டம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தற்போது, பாஜக-வினர் வார்டு வாரியாக அலுவலகம் திறந்து வீட கட்டித் தருவதாக பொதுமக்களிடம் விண்ணப்பங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இது போன்று பொது மக்கள் விண்ணப்பிக்க பணம் தரக்கூடாது. இந்த விண்ணப்பங்களை விற்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியும் பாஜக-வினர் விண்ணப்பங்களை வார்டு வாரியாக விற்கும் சட்டவிரோதமான செயலை செய்து வருகின்றனர்.
மாநில அரசும், உள்ளாட்சி நிர்வாகமும் செய்ய வேண்டிய பணியை கோவை மாவட்டத்தில் பொது மக்களிடம் 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு பாஜக-வினர் செய்து வருகின்றனர். தற்போது வரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து பாஜக-வினர் பணம் வசூலித்துள்ளனர். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் பாஜக அலுவலகம் மற்றும் முகாம்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.