கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியியல் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், அரசு பள்ளிகளை உள்ளடக்கிய கல்வி திட்டத்தில் பயிலும் மாற்றுத் திறனாளிகள் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு பயிற்றுனர்களுக்கு அரசாணை வழங்கக்கோரி வாயில் கருப்பு துணி கட்டி பயிற்றுனர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதுகுறித்து மாற்று திறனாளி பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு பயிற்றுனர்கள் கூறுகையில், மாற்றுத் திறனாளிகள் பயிலும் பள்ளிகளில் தமிழகத்தில் 2300 பேரும், கோவை மாவட்டத்தில் 104 சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் 44 உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கீழ் பணிபுரிந்து வந்தவர்களுக்கு கடந்த 2012 பிறகு தமிழக அரசு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்தது.
ஆனால் பணிபுரிவதற்கு அத்தாட்சியாக அரசு எந்த ஒரு ஆணையும் வழங்கவில்லை. மாத மாதம் வழங்கப்படும் விருப்ப விடுமுறை தவிர வேறு எதுவும் வழங்கபடுவதில்லை. பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கபடுவதில்லை. இது குறித்து கேட்டால் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் விருப்பமிருந்தால் பணி செய்யுங்கள் அல்லது வேலையை விட்டு செல்லுமாறு மிரட்டுகின்றனர்.
மேலும் கடந்த 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கபடவில்லை. தொகுப்பு ஊதிய அடிப்படையில் சம்பளம் வழங்கபட வேண்டும். பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் எந்த ஒரு நடவடிக்கையினையும் அரசு எடுக்காத காரணத்தினால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கு குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடத்தப்படும் மருத்துவ முகாமிற்கு கருப்பு துணி கட்டி வந்த தங்களை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை" என்றனர்.
மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை 5 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.