மார்கசிஸ்ட் கட்சியின் டெல்லியிலுள்ள தலைமை அலுவலகத்தில் ஜீன் ஏழாம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதன் ஒருபகுதியாக கோவை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் அதிகம் இருக்கக்கூடிய பகுதியான துடியலூரில் நேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியுள்ளனர்.
அப்போது இந்து முன்னனி மற்றும் இந்துத்துவா அமைப்பினரை கடுமையாக தாக்கி பேசியுள்ளனர். இதனையடுத்து, இன்று காலை 6 மணியளவில் மர்ம நபர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்பாசிடர் காரின் மீது பெட்ரோல் கலந்த இரண்டு மண்ணெண்ணெய் குண்டுகளை வீசியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கட்சியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கோவை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் லஷ்மி, மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களிடம் விசாராணை நடத்தினார். சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் துறையினர் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணய் கலந்த குண்டுகள் வீசியதில் உடைந்துபோன பாட்டில்களில் இருந்து கைரேகையை சேகரித்தனர். மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு குற்றாவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
