உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், அரசு இரத்த வங்கிகள் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விழுப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பல்வேறு செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஊர்வலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி அரசு மருத்துவமனையில் நிறைவுற்றது.

பேரணியில் பங்கேற்ற மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டபடியே ஊர்வலமாக சென்றனர். இது குறித்து மாவட்ட இரத்த வங்கி துறைத் தலைவர் மங்கையர்கரசி கூறும்போது, மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மற்றும் விபத்து காலங்களில் எவ்வித தங்கு தடையுமின்றி இரத்தம் கிடைக்க பெறும். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த பேரணி நடைபெறுகிறது.

மேலும், ஒரு யூனிட் இரத்தம் 4 உயிர்களை காப்பாற்ற உதவும். மாதம் 1000 யூனிட் இரத்தம் கொடையாளர்கள் வழங்குவதால் வருடம் தோறும் 12 ஆயிரம் யூனிட் இரத்தம் பெறப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட மக்கள் தொகையில் ஒரு சதவிகித மக்கள் இரத்தம் வழங்க முன்வந்தாலே தேவைகள் பூர்த்தி அடையும்" என்றார்.