மதுக்கரை ஒன்றியத்தில் சத்துணவு அமைப்பு சமையலர், உதவியாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கு முறையாக ஓய்வூதியம் வழங்கக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
மதுக்கரை ஒன்றியத்தில் சத்துணவு அமைப்பு சமையலர், உதவியாளர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற எங்களுக்கு 2017 ஜனவரி முதல் மே மாதம் வரை ஐந்து மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
மற்ற ஒன்றியங்களில் வழங்குவது போல் மதுக்கரை ஒன்றியத்திலும் மாதாமாதம் ஓய்வூதியம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் கடந்தும் ஓய்வூதிய பணப்பலன்கள், ஒட்டுமொத்த தொகை, பிஎஃப் எதுவும் கிடைக்காமல் சத்துணவு பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, ஓய்வூதிய பணப்பலன்கள் கிடைக்கவும், மதுக்கரை ஒன்றியத்தில் மாதம் தவறாமல் ஓய்வூதியம் கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.