நடிகர் ரஜினிகாந்த் தனியாக நின்றால் கூட வாக்குகள் கிடைக்கும். ஆனால், பாஜக-வில் இணைந்தால் அவரை மக்கள் புறக்கணிப்பார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில்:-
சிபிஎம் தலைவர் யெச்சூரி மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்எஸ்எஸ் குண்டர்களின் இந்த தாக்குதல் மூலம் பாஜக-வின் சர்வாதிகார ஆட்சி புலப்படுகிறது.
ஜனநாயகத்திற்கும், கட்சிகளுக்கும் ஆளும் பாஜக அரசு மரியாதை அளிக்க வேண்டும். பிரதமர் மோடிக்கும் அதே மனநிலை தான் உள்ளது என்பதை அவரது மவுனம் நிரூபிக்கிறது. எனவே மாற்று கட்சியினர் மீதான தாக்குதல்களை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும்.
விவசாயிகள் 8 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மத்தியபிரதேச அரசின் தவறான முடிவு. இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் கூறுவது சரியல்ல. உள்துறை அமைச்சர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். விளைபொருட்களுக்கு உரிய விலை கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு 13.5 லட்சம் கோடி ரூபாயை பெருமுதலாளிகளுக்கு வரிசலுகையாக வழங்கியுள்ளது.
தமிழகத்தில் காலூன்ற அனைத்து முயற்சிகளையும் பாஜக எடுத்தாலும் அதனால் கட்சியை வளர்க்க முடியாது. நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கினால் கூட வாக்குகளை பெற முடியும். ஆனால், பாஜகவில் இணைந்தால் அவரை மக்கள் புறக்கணிப்பார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை அறிவிப்பதில் மத்திய அரசு ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதுகுறித்து தனது கட்சியினரிடமே பேசாத பிரதமர் மோடி, இந்த கூட்டத்திற்கு அழைப்பார் என எதிர்பார்க்க முடியாது.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கு பெயர் பரீசிலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நவீன் பட்நாயக் மற்றும் நித்தீஷ்குமார் உள்ளிட்டோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யாவிட்டால் பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்கட்சிகள் முடிவு செய்யும்.
காங்கிரஸ் பல்வேறு தளங்களில் சிபிஐயை தவறாக பயன்படுத்திய நிலையில் பாஜக மோடி என்ற ஒருவரை மையமாக கொண்டு சிபிஐ-யை தன் வசத்திற்கு பயன்படுத்துகிறது.
இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட மக்கள் பல்வேறு உணவுப் பழக்கங்களை கொண்டுள்ளனர். இதில், மாட்டிறைச்சி உண்ணக் கூடாது என மத்திய அரசு சட்டம் இயற்றுவது தனி மனித அடிப்படை உரிமையினை பறிக்கும் செயலாக உள்ளது. மேலும், உலகிலேயே அதிகமாக 3 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்தியாவில் இருந்துதான் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மோடியின் இந்த தடைச்சட்டத்தால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாடுகளின் மீது பிரதமர் மோடிக்கு உண்மையில் அக்கரை இருப்பின் மாடுகளுக்கான கோசாலைகளை அதிகளவில் நிறுவ முன்வர வேண்டும்.
மிகப்பெரிய பிரச்சனைகள் நடைபெறும் இடங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்களை அனுமதிக்காதது வாடிக்கையாகிவிட்டது. இது அவர்கள் தவறிழைத்திருப்பதை உறுதி செய்கிறது." இவ்வாறு செய்தியாளர்களிடம் நாராயணா தெரிவித்தார்.