மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகம் குறிவைத்து தாக்கபடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், மாடுகளை பாதுகாப்பதாக மத்திய அரசு வேஷம் போடுகிறது. தமிழ்நாட்டின் அடிப்படை மாநில உரிமை பரிக்கப்படுகிறது. மாநில உரிமைகளை காப்பாற்றியவர் ஜெயலலிதா. அவர்பின் வந்தவர்களுக்கு துணிச்சல் உண்டா என தெரியவில்லை. தமிழகத்தை ஆளுகிற இடத்தில் ஆள் இருக்கிறது போல் தெரியவில்லை.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு தனிப் பெருமை உள்ளது. வைர விழா நடத்துவதற்கு அனைத்து தகுதியும் அவருக்கு உள்ளது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாவடக்கத்துடன், கருணாநிதி-யின் சாதனைகளை ஒப்புகொள்ள வேண்டும். தமிழகத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. தமிழ்நாட்டிற்குள் பாரதீய ஜனதா கட்சி கால் அடி எடுத்து வைக்காமல் தடுக்கும் கட்சிக்கு, அரசியலில் ஒத்துழைப்பு வழங்கப்படும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.