ஈஷா-வின் பசுமைக் கரங்கள் திட்டம் சார்பில் 2017-18 வருடத்திற்கான மரக்கன்றுகள் நடும்பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 லட்சம் மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு மக்கள்பங்களிப்பின் மூலமாக, நடுவதை இலக்காகக் கொண்டு செயலாற்றி வருகிறது ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம்.

ஒவ்வொரு வருடமும் இத்திட்டத்தின் மூலமாக பசுமைக்கரங்களின் வல்லுனர்கள், விவசாயிகளின் நிலத்திற்கு நேரடியாக சென்று அவர்களுக்கு மரம் வளர்க்கும் முறைகள் மற்றும் ஆலோசனைகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். மேலும் 2011-இல் ஈஷாவால் துவங்கப்பட்ட பசுமைப் பள்ளி இயக்கம் மூலமாக பள்ளிக்குழந்தைகளுக்கு மரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மரக்கன்றுகளை உருவாக்குவது பற்றி செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்ததிட்டத்தின் சார்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 35 ஈஷா நாற்றுப்பண்ணை மூலம் இவ்வருடம் 40 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்கி மக்கள் பங்களிப்போடு நடுவதற்கான திட்டத்தினை துவங்கப்பட்டுள்ளது. இதைப் போன்ற நிகழ்ச்சிகள் தமிழகத்தின் பிறபகுதிகளான சென்னை, கோவை, ஈரோடு, திருச்சி, சேலம், மதுரை, கரூர், திருவண்ணாமலை, நெய்வேலி மற்றும் பாண்டிச்சேரி, கடலூர், பொள்ளாச்சி, வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி போன்ற இடங்களிலும் நடைபெறவுள்ளது.

2006-ம் ஆண்டு, ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 2.5 லட்சம் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு 8,52,587 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதன்மூலம் கின்னஸ் உலக சாதனையில் இத்திட்டம் இடம்பெற்றது. 2010-ம் ஆண்டிற்கான இந்திய அரசின் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் விருதான "இந்திரா காந்தி பரியாவரன் புரஸ்கார்" விருது பசுமைக் கரங்கள் திட்டத்துக்கு முன்னாள் மறைந்த ஜனாதிபதி அப்துல் காலம் அவர்களால் வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் நலத் துறையால் வழங்கப்பட்ட“2010ம் ஆண்டிற்க்கான சுற்றுச்சூழல்” விருதையும் பசுமைக்கரங்கள் திட்டம் வென்றுள்ளது.

தமிழகம் முழுவதும், கிராமப்புறங்களிலும் நகர்புறங்களிலும் பசுமைப் பரப்பை அதிகப்படுத்துவதற்காக முழுமுனைப்புடன் இத்திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மேலும் பசுமைகரங்கள் திட்டத்தின் ஒரு அங்கமான ஈஷா விவசாய இயக்கம், இயற்கை விவசாய தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு, மண்ணின் வளத்தையும் பாதுகாக்க செயல்பட்டுவருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக, அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், பெருநிறுவனங்கள் போன்றவைகளுடனும் இணைந்து சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளிலும் ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் விழிப்புணர்வை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறது.