மாவட்டத்தின் வனப்பகுதியையொட்டிய பகுதிகளில் மனித விலங்கு மோதல் தொடர்கதையாகி வந்த நிலையில் தற்போது நகரத்திற்குள்ளேயே யானை புகுந்து நான்கு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய யானைகளின் வாழ்விடத்தில், வழித்தடத்தில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டும், அதனை சுற்றி மின்வேலிகள், சுற்றுசுவர்கள் அமைத்ததின் விளைவாக யானைகளின் வழித்தடம் மறிக்கப்பட்டு தடம் மாறும் யானைகள் ஊருக்குள் நுழைந்து வருகிறது. இதன் விளைவாக விவசாய நிலங்கள், பயிர்கள் பாதிக்கப்படுவதோடு தற்போது மனித உயிரிழப்புகள் என்பதும் கடந்த இரண்டாண்டுகளில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று மதுக்கரை பகுதியில் சுற்றிவந்த ஒற்றையானை போத்தனூர், வெள்ளளூர் உள்ளிட்ட நகரப்பகுதிக்குள் நுழைந்துள்ளது. திரும்பிச்செல்ல தடம்தெரியாமல் தவித்த யானை அகப்பட்ட மனிதர்களை தாக்கியுள்ளது. இதன்விளைவாக ஒரு சிறுமி உட்டபட இரண்டு பெண்கள் மற்றும் ஒரு முதியவர் என நான்கு அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளது.
இந்த உயிர்ச்சேதத்திற்கு முழுக்க முழுக்க மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே காரணம். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு மற்றும் பெரியநாயக்கன்பாளைய ஒன்றியம், தொண்டாமுத்தூர் ஒன்றியம், மேட்டுப்பாளையம் தாலுகா ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்றபோது இந்த மனித விலங்கு மோதல் குறித்து விவாதம் நடத்தி உரிய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் விளக்கமாக தீர்மானத்தின் அடிப்படையில் மனு அளித்திருந்தோம்.
அதில், மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய காருண்யா பல்கலை கழகம், ஈசாயோகா மையம், தாமரா ரிசாட், ஏசிசி சிமென்ட் நிறுவனம், மாதஅமிர்ந்தனாயி கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏராளமான பெருநிறுவனங்களின் உல்லாச விடுதிகள் இந்த வனப்பகுதிக்குள் ஆக்கிரமித்துள்ளது. நொய்யல் நீரோடைகளை மறித்தது மட்டுமல்லாமல், யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்து மின்வேலிகள் மற்றும் நீண்ட தூர சுற்றுச்சுவர்களை எழுப்பிள்ளதால் மனித விலங்கு மோதல் நடைபெறுகிறது என புகார் அளித்திருந்தோம்.
ஆனால் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. பெரு நிறுவனங்களால் வனப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதம்கூட கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கைகளில் செய்தியாக வெளிவந்திருந்தது. ஆனால் இதுவரையில் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை. மனித உயிர்களை விட ஆக்கிரமிப்பாளர்களின் நலனே முக்கியம் என மாவட்ட நிர்வாகம் கருதுகிறதோ என்கிற சந்தேகம் மக்களிடம் எழுந்து வருகிறது. தற்போது நான்கு மனித உயிர்கள் பலியான பிறகாவது மாவட்ட நிர்வாகம் சுதாரித்து உடனடியாக சீரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஒருவேளை இந்த விவகாரத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்த நினைத்தால் மார்க்சிஸ்ட் கட்சியே மக்களை திரட்டி ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து யானைகளின் வழித்தடத்தை மீட்க நேரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது வரும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.