உலக போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு வாரம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை மையம் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்துள்ளார்.
உலக போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட சுகாதார துறை மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள் இணைந்து போதை பொருள் தடுப்பது குறித்தும், போதை பொருட்களுக்கு மக்கள் அடிமையாக கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாகவும் கோவை அரசு கலை கல்லூரி அருகே விழிப்புணர்வு பலூன்களை பறக்கவிட்டனர். மேலும் தங்களது பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியை மாவட்ட சுகாதார இணை இயக்குநர் பானுமதி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், போதை பொருட்களை முற்றிலும் தடுக்க அவற்றை விற்பனை செய்யும் இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளுக்கு நேரில் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு அபராதங்கள் விதித்து வருவதாக தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் வழிகாட்டுதல்படி வாரம் முழுவதும் கோவை மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வுகள் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோல் கோவை பிபிஜி கல்வி நிறுவனங்கள் சார்பில் புகையிலை எதிர்ப்பு பேரணி பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்றது. கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்த இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு புகையிலை மற்றும் புற்றுநோய் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.