கோவை மாநகரில் கனமழை பெய்தால் ஆங்காங்கே மழைநீர் தேங்குவது வழக்கம். முக்கியமாக, அரசு மருத்துவமனை அருகே உள்ள லங்கா கார்னர் பாலத்தின் கீழ் பகுதி மற்றும் அவிநாசி மேம்பாலத்தின் கீழ் பகுதி ஆகியவற்றில் அதிகப்படியான மழைநீர் தேங்கும். அதனால், இந்த பகுதிகளில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்படும். முழுமையாக மழைநீர் வெளியேற்றினால் மட்டுமே வாகன போக்குவரத்து மீண்டும் துவங்கும். மழைக்காலத்தில் இப்பகுதி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது. இதனைத்தொடர்ந்த, முதற்கட்டமாக லங்கா கார்னர் பாலத்தின் கீழ் மழைநீர் தேங்குவதை தடுக்க மாற்று ஏற்பாட்டினை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பிரச்சனை குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகள் பேசுகையில், "ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து லங்கா கார்னர் வரை பள்ளமாக உள்ளது. ரோட்டின் இருபுறத்திலும் உள்ள சாக்கடை கால்வாயில் மழைநீர் ஒழுங்காக செல்வதில்லை. இதனால் ரோட்டில் ஓடும் மழைநீர் பாலத்தின் கீழ் தேங்குகிறது. இதை தடுக்க தீயணைப்பு நிலையம், அரசு மருத்துவமனை அருகே ரோட்டின் நடுவில் குழிதோண்டி அதன் மீது இரும்பு கம்பியால் ஆன பாலம் அமைக்கப்பட உள்ளது. அதனுடன் போடப்பட்டு இருக்கும் குழாய், ரோட்டின் இருபுறத்திலும் உள்ள சாக்கடை கால்வாய்க்குள் இணைக்கப்படுகிறது.
இதனால் அந்த ரோட்டில் செல்லும் மழைநீர் அனைத்தும் சாக்கடை கால்வாய்க்குள் செல்லும். இப்பணிக்கு ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த ரோட்டில் மழைநீர் வடிகால் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணி முடிந்து பயன்பாட்டு வந்தால் லங்கா கார்னர் பாலத்தில் கீழ் தேங்கும் மழைநீர் பிரச்சனை தீரும்" என்றனர்.
தற்போது, இந்த பணிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர் அமைப்புகளின் பரிந்துரையை ஏற்று மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் பணிகளை விரைவில் முடிக்க ஒப்புதல் அளித்தார். இதனை அடுத்து கோவை நகரத்தில் உள்ள பல்வேறு பாலங்களில் இந்த மழைநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நகரத்தில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்து புதிய வடிவமைப்பு மாற்றங்களை அமைத்து புதிய திட்டத்தை மேற்கொள்ளவதாக கட்டிடக்கலைஞர் அருண்பிரசாத் தெரிவித்தார்.

இதனிடையே, நேற்று முன்தினம் கிக்கானி பள்ளி அருகே உள்ள பாலத்தின் கீழ் சுரங்கப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பாலத்திற்கு செல்லும் மழைநீர் வடிகாலில் படிந்துள்ள மண் திட்டுக்கள் அகற்றப்பட்டது.
