கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்கள் பற்றாக்குறை, தூய்மை மற்றும் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


Coimbatore: கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் பவன் குமார், அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, இருப்பிட மருத்துவர் சரவண பிரியா மற்றும் பல்வேறு துறை மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர், பின்னர் ஸ்கேனிங் வார்டு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்குச் சென்று ஆய்வு செய்தார்.



மருத்துவமனையில் தேவையான கட்டமைப்பு வசதிகள், நோயாளிகளுக்கான சேவைகள் மற்றும் மருத்துவ உபகருட்கள் குறித்து மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவமனை கேண்டீனில் தின்பண்டங்கள் மற்றும் தேநீர் பருகியும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத், தமிழக முதலமைச்சர் மக்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருவதால், அரசு மருத்துவமனைகளில் நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

மருத்துவமனையில் சில கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள துறைகளுக்கு புதிய நியமனங்கள் தொடர்பாக முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், மருத்துவமனையின் பழைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் அமைப்பதற்கான திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், பராமரிப்பு பணிகளில் தனியார் நிறுவனங்களுடன் அரசு தரப்பிலும் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

தனியார் ஒப்பந்தங்களில் முறைகேடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அதுகுறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். நோயாளிகளுக்கான தள்ளுவண்டி வசதி, குடிநீர், உறவினர்கள் காத்திருக்கும் இடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

மருத்துவமனையில் உள்ள கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக கூறிய அமைச்சர், அவற்றை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். “சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று தெளிவாக அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறினார்.

கைதிகள் அறையை விட காவலர்கள் தங்கும் அறை மோசமான நிலையில் இருப்பதாக எழுந்த கேள்விக்கு, 20 நாட்களுக்குள் அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள பிற அரசு மருத்துவமனைகளையும் மேம்படுத்தும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், எதிர்காலத்தில் Surprise Visit மூலம் திடீர் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

மருந்துகள் பற்றாக்குறை மற்றும் சில மருந்துகளை வெளியில் வாங்க நோயாளிகள் நிர்பந்திக்கப்படுவது தொடர்பான புகார்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

மேலும், மக்கள் செல்போன் செயலி மூலம் குறைகளை தெரிவிக்கக்கூடிய வசதிகளையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கோவை வளர்ச்சியைப் பற்றி பேசிய அமைச்சர், கல்வி, மருத்துவம், தொழில் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பெரிய அளவிலான மேம்பாடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடைபெறும் என்றும், மெட்ரோ ரயில் திட்டத்தை கோவைக்கு கொண்டு வருவது அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...