கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உருவாகும். எனவே, தேர்தலில் அதிமுக அணியை மக்கள் முற்றிலும் தோற்கடிக்க வேண்டும் என்று பேசினார்.


Coimbatore: 2026 தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவாக அரசியல் பிரபலங்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன்படி, இன்று கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “வாக்குப்பதிவு முடிந்த பிறகு இந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.



மேலும், கடந்த 20 ஆண்டுகளின் அரசியல் நிலையை எடுத்துக்காட்டிய அவர், “இந்த 20 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடைபெற்றது, மற்ற 10 ஆண்டுகள் திமுக ஆட்சி நடைபெற்றது. இந்த இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, தற்பொழுது மக்கள் யாரை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது” என்று கூறினார்.

“இது நான்கு முனை அல்லது ஐந்து முனை போட்டி அல்ல; இது தெளிவான இருமுனைப் போட்டி. ஒரு பக்கம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உள்ளது; மற்றொரு பக்கம் அதிமுக மற்றும் பாஜக எனும் இந்துத்துவா சிந்தனையை முன்னிறுத்தும் அணிகள் உள்ளன” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், அமமுக உள்ளிட்ட கட்சிகளை சுட்டிக்காட்டிய அவர், “அவர்களுக்குள் எந்த ஒற்றுமையும் இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை அமமுக, அதிமுகவை கடுமையாக விமர்சித்தது. ஒரு ஆண்டு காலத்திற்கு முன்பு அதிமுக, பாஜகவுடன் இணையவே மாட்டோம் என்று கூறியது. ஆனால் இன்று அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூட்டணி அமைத்துள்ளனர்” என்று விமர்சித்தார்.



தமிழகத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது கட்சிகள் இருப்பதை மறுப்பதில்லை என்றும், “அவர்களுக்கு இளைஞர்களின் ஆதரவும், ரசிகர்களின் ஆதரவும் உள்ளது. அனைத்து கட்சிகளையும் எதிர்க்கும் மனப்பான்மையுடைய ஆதரவாளர்களும் உள்ளனர். ஆனால் நடைமுறையில் போட்டி என்பது திமுக மற்றும் அதிமுக இடையில்தான் உள்ளது” என்று தெளிவுபடுத்தினார்.

மேலும், “ஐந்தாவது கட்சியாக ‘நோட்டா’ என்பதும் உள்ளது. ஆனால் நோட்டாவிற்கு வாக்களிப்பது என்பது, மூன்றாவது அல்லது நான்காவது கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கு சமமானது. ஆட்சி அமைக்கப் போகும் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும்; இல்லையெனில் அந்த வாக்கிற்கு பயனில்லை” என்று கூறினார்.



அடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி குறித்து அவர் குறிப்பிட்டு, “மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன” என்று கூறி அவற்றை விரிவாக பட்டியலிட்டார்.

“மேலோட்டமாக பார்த்தால் திமுக மற்றும் அதிமுக இடையே போட்டி நடைபெறுகிறது போல தோன்றலாம். ஆனால் உண்மையில் அதிமுகவை வழிநடத்துவது மற்றும் ஊக்குவிப்பது பாரதிய ஜனதா கட்சியே” என்று அவர் குற்றம்சாட்டினார். “ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்ற பழமொழியைப் போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது” என்று கடுமையாக விமர்சித்தார்.



பாஜகவின் அரசியல் நோக்கத்தை சுட்டிக்காட்டிய அவர், “இந்தி மற்றும் இந்துத்துவா சிந்தனையை திணிப்பதே பாஜகவின் முக்கிய நோக்கம். சிபிஎஸ்சி பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக மாற்றப்படுகின்றது; இது இந்தித் திணிப்பு அல்லவா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “தமிழ் வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை விட 17 மடங்கு அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு நிதி வழங்கப்படுகிறது. அதேபோல் இந்தி மொழிக்கான நிதி பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது” என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசின் அரசியல் நிலைப்பாடு குறித்து அவர் கூறுகையில், “அரசியல் சாசனத்தை திருத்த முடியாத அளவுக்கு மட்டுமே மக்களிடம் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டார். பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதை வரவேற்கிறோம் என்றும், “பெண்கள் இடஒதுக்கீட்டை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சியே. ஆனால் தற்போது பாஜக அரசு கொண்டு வரும் திருத்தங்கள் ஒரு மோசடி மற்றும் சூழ்ச்சி” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...