ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்து எடுக்க பிரதான அரசியல் கட்சிகள் இப்போதே ஆலோசனை நடத்த தொடங்கி இருக்கின்றன.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ்குமார் சந்தித்து பேசி உள்ளார். புதிய ஜனாதிபதி பதவிக்கு பா.ஜ.க. தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஜார்க்கண்ட் மாநில பெண் கவர்னர் திரவுபதி முர்மும், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.
அதே போன்று தென்னிந்தியாவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் பெயரும், தொழில் அதிபர் "இன்போசிஸ்" நாராயண மூர்த்தி பெயரும் ஜனாதிபதி பதவிக்கு அடிபடுகிறது.
ஜனாதிபதி பதவிக்கு நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிசீலனையில் இருப்பதாக வரும் செய்திகள், தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மக்களின் தேவையறியாத ஒருவர், அவர் யாராக இருந்தாலும் ஒரு பிரபலமானவராக இருந்தால் மட்டுமே போதும் மக்களின் ஆளும் சக்தியடைவார் என்பதற்கு உதாரணமே தற்போது நடிகர் ரஜினியின் பெயர் ஜனாதிபதி தேர்தல் வரை சென்றிருப்பது ஆகும்.
பெரும்பாலான மக்களின் மனநிலையும் பிரபலங்களை நோக்கியே உள்ளதால் சில அரசியல் கட்டமைப்புகளுக்கான தகுதிகள் அற்றவரை ஆராய்ந்து பாராமல் தேர்வு செய்துவிடுகின்றனர்.
மக்கள் அந்த மனநிலையை மாற்றி சிறந்த நாட்டுப்பற்றும் பொதுநலமும் உடைய நபரை தங்களை ஆளும் ஒருவராக தேர்ந்தெடுப்பதினால் மட்டுமே நம் நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் தீரும், மக்களின் வாழ்வும் சிராகும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.