வால்பாறை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா வருடா வருடம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் 65-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா ஏப்ரல் 6-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கி 10-ம் தேதி வரை நடைபெற்றது.

திருவிழாவின் கடைசி நாளான திங்களன்று காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தினை வள்ளிக்கன்னு, மதனகோபால் முதலியார், மருத்துவர் முனிசாமி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் முத்துராஜ், நகராட்சி ஆணையாளர் சம்பத்குமார் மற்றும் வனத்துறையினர் ஆகியோர்கள் துவக்கி வைத்தனர்.

முன்னதாக, பக்தர்கள் அங்க அலகு பூட்டி நல்லகாத்து ஆற்றில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பறவைக்காவடியில் தொங்கியவாரு ஊர்வலமாக வந்து சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடைந்து வழிபாடுகள் செய்தனர்.

தொடர்ந்து கரகாட்டம், செண்டமேளம், சிக்காட்டம், இன்னிசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு 8 மணியளவில் சுவாமி முக்கிய வீதிகள் தேர்பவனி சென்று இரவு 12 மணியளவில் கோவிலை வந்தடைதல் நடைபெற்று. இதைத்தொடர்ந்து, நள்ளிரவு 2 மணிக்கு மஹா அபிஷேகம் நடைபெற்று 3 மணிக்கு வானவேடிக்கையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.