டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை சிவானந்தா காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்திலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்காக கோவையில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் இன்று சிவானாந்தா காலனி பகுதியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையினை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கவனம் செலுத்தும் தமிழக அமைச்சர்கள் ஏன் விவசாயிகளின் கோரிக்கைகளில் கவனம் செலுத்தவில்லை என கேள்வி எழுப்பினர். மேலும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் தாக்கப்பட்ட போது உடனடியாக அறவழிப் போராட்டம் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏன் விவசாயிகளின் அறவழிப்போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பிய மாணவர்களும், இளைஞர்களும் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கையினை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து போராட்டங்களை தீவிரப்படுத்தப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.