தமிழக காவல்துறை வரலாற்றில் குதிரைப்படையின் சகாப்தம் கி.பி.1670 முதலே துவங்கிவிட்டது. அப்போது, தமிழக காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரை தனது பயணத்திற்காக அலங்கார மெய்க்காவலர்களை நியமிக்குமாறு அப்போதைய சென்னை மாநகர ஆளுநர் சர்.வில்லையம் லங்ஹோர்ன் உத்தரவிட்ட போதே தமிழக காவல்துறை வரலாற்றில் குதிரைகளின் பயன்பாடு துவங்கிவிட்டது.
மேலும், கி.பி.1800 முதல் காவல் பணிகளுக்காகவும், தமிழக காவல்துறையில் குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1926ம் ஆண்டில் வால்டர் கிராண்ட் என்பவர் சென்னை மாநகர காவல் கண்காணிப்பாளராக இருந்த போது 15 குதிரைகளைக் கொண்ட குதிரைப்படைப் பிரிவு துவங்கப்பட்டது.
பின்னாட்களில் அக்குதிரைப்படைப் பிரிவு 56 குதிரைகளுடன் விரிவுபடுத்தப்பட்டது. சென்னை மாநகர காவலில் மோட்டார் வாகனங்களுடன் மோட்டார் வாகனப்பிரிவு துவங்கப்பட்ட போது குதிரைகளின் எண்ணிக்கை 34 ஆக குறைக்கப்பட்டது.
கோவை காவல்துறைக்கென தனியே ஒரு குதிரைப்படைப்பிரிவு அமைக்க 1982 ஆம் ஆண்டிலேயே அனுமதி அளிக்கப்பட்டபோதும் கோவை மாநகர காவல்துறை ஆணையரகம் அமைக்கப்படும் வரை குதிரைப்படை பிரிவு அமைப்பது தாமதமாகி வந்தது.
பின்னர், 29.03.1991 அன்று 10 குதிரைகளைக் கொண்ட கோவை மாநகர குதிரைப் படைப்பிரிவு அப்போதைய காவல்துறைத் தலைவர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) வால்டர் தேவாரத்தால் துவங்கிவைக்கப்பட்டது.
இந்நிலையில், குதிரைகள் இல்லாத காரணத்தினால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருந்த கோவை மாநகர குதிரைப் படைப்பிரிவு இன்று மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இதுகுறித்து, கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் கூறுகையில், 1670 ஆம் ஆண்டில் மவுண்டன் கிளை துவங்கப்பட்டது. அன்றிலிருந்து கோவை, மதுரை, சென்னை ஆகிய மூன்று நகரங்களில் இது செயல்பட்டு வந்தது. கோவையில் 1901-யில் குதிரைப் படை செயல்பட்டு வந்தது. இதனிடையே, கடந்த 10 ஆண்டுகளாக குதிரை தட்டுப்பாட்டின் காரணமாக கோவை மாநகரத்தில் குதிரைப் படைப் பிரிவு நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இக்குதிரைகளுக்கு சென்னை குதிரைப் படைப்பிரிவு மூலம் ஒரு மாத காலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு தற்போது 5 குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும், 5 குதிரைகள் வரவுள்ளது. இவற்றை பயன்படுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இக்குதிரைகள் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்கள், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும்" என்றார்.