கோவை பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மேலாண்மைக் கல்லூரியில் இன்று மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், பீளமேடு பகுதியின் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் வி.சாரதா, பெண்கள் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான அசோசியேசன் தலைவர் பி.சுதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் சி.ரமேஷ்குமார் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் வி.சாரதா நிகழ்ச்சியில் பேசுகையில், "இன்று சர்வதேச மகளிர் தினம் மற்றும் எல்லாப் பெண்களும் தங்களைத் தாங்களே அதிகாரப்படுத்திக் கொள்ள வேண்டும். பல்லாயிரக் கணக்கான வாய்ப்புகள் இன்றைய பெண்களுக்கு உள்ளது. அவர்கள் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவிகள் வங்கித் தேர்வுகள் எழுதி வங்கித் துறையில் தங்களது வேலையினை மேற்கொண்டு வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும். வங்கி வேலைகள் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானவை. வங்கித் துறையில் பணியாற்றும் பெண்கள் தங்களது குடும்ப வாழ்வையும், வேலையையும் எளிதாக கையாள முடியும்" என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய சுதா, தொழில்முனைவோராக தனது வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அவர் பல தொழில்முனைவோர்களின் வெற்றிக் கதைகளை மாணவிகளுக்கு எடுத்துக்கூறினார். அவர் தனது, எம்பிராய்டரி நிறுவனத்தின் கதையை கூறினார். ஒபீடா அமைப்பு பெண்களின் புதிய நிறுவனங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. நடுத்தர வயதைச் சேர்ந்த பெண்களுக்கு அவர்கள் தொழில் துவங்குவதற்கான உதவிகளை செய்திறது. அதற்காக அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், தொழில் துவங்குவதற்கு முன் அதனுடைய சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை தயாரிக்கவும் பயிற்சியளிக்கிறது என கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், இந்த ஒபீடாவின் முக்கிக் குறிக்கோள் பெண்களுக்கு என்று தனி அடையாளம் உறுவாக்கி அவர்களுக்கு சுதந்திரமான ஒரு வாழ்வை மேற்கொள்ள உதவுவதே ஆகும். இந்த அமைப்பு மானியம் பெருவது குறித்த தகவல்களும், சந்தைப் படுத்துதல் மற்றும் மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் குறித்தும் பெண்களுக்கு பயிற்சியளிக்கிறது.