வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

விலைவாசி உயர்வினை கருத்தில் கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலனையும், வணிக மற்றும் தொழில் அமைப்புகளின் நலனையும் காக்கும் வண்ணம், வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.



வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டினுடைய பொருளாதாரம் சரியான பாதையில் பயணிக்கும் வகையில், பொது நலன் பாதுகாக்கப்படுவதையும், சமூக நலன் முன்னிறுத்தப்படுவதையும், லாபத்தை லட்சியமாக கொள்ளாமல், மக்களுக்கான சேவை நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதையும் நோக்கமாக கொண்டு செயலாற்றுபவைதான் பொதுத்துறை நிறுவனங்கள்.

இந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை தங்கு தடையின்றி அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம். இந்த நோக்கத்தையே சிதைக்கும் நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது.

"மாதம் ஒருமுறை மின் பயன் அளவீடு", "கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம்", "விசைத் தறிக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம்" போன்ற பல வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் அள்ளி வீசிய திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை வாட்டி வதைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. 

ஒன்பது மாதங்களுக்கு முன்னர், வீடு, வணிகம், தொழிற்சாலை ஆகியவற்றிற்கான மின் கட்டணத்தை பன் மடங்கு உயர்த்தி மக்களை வாட்டி வதைத்த திமுக அரசு, தற்போது வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை உயர்த்தி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி இருக்கிறது. 

திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மின் கட்டண உயர்வுக்கு காரணம் முந்தைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும், மத்திய அரசும் என்று அரசு செய்திக் குறிப்பில் சூசகமாகத் தெரிவித்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு மின் கட்டணத்தை பன் மடங்கு உயர்த்தியும், தரமான மின்சாரத்தை தங்கு தடையின்றி வழங்காத நிலையில், ஒடிசாவில் உள்ள சந்திரபிலா சுரங்கத்தில் இருந்து நிலக்கரி எடுத்து வரும் பணி காலதாமதமாவதன் காரணமாக ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில், வணிகப் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

வணிகப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்படுவதன் காரணமாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயரக்கூடும். இதன்மூலம் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். மின் கட்டண உயர்வு என்பது ஒரு சங்கிலி பிணைப்பினை போன்றது.

விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வினால் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்ற இந்தத் தருணத்தில், நாட்டின் பண வீக்கம் ஏறிக் கொண்டே இருக்கின்ற இந்தச் சமயத்தில், சொத்து வரி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, எரிவாயு விலை உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, என பலவற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

இந்தச் சூழ்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணத்தை தி.மு.க. அரசு உயர்த்தியிருப்பது நியாயமற்ற செயல். "சொல்வதைச் செய்வோம்" என்று மக்களிடம் வாக்களித்து விட்டு, சொல்லாததை செய்யும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

திராவிட மாடல் அரசு என்று சொல்லிக் கொண்டு மக்கள் விரோதச் செயல்களை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. 

விலைவாசி உயர்வினைக் கருத்தில் கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலனையும், வணிக மற்றும் தொழில் அமைப்புகளின் நலனையும் காக்கும் வண்ணம், வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சரை மு.க.ஸ்டாலினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...