தாராபுரம் சின்ன காளியம்மன் கோவிலில் சாமி சிலையை மர்மநபர்கள் இரவில் திருடிச் சென்றனர். சிசிடிவி காட்சியில் இரண்டு நபர்கள், இரவு நேரத்தில் சிலையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் அடிப்படையில் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தாராபுரம்: தாராபுரத்தில் சின்ன காளியம்மன் கோவிலில் சாமி சிலை திருடு போன சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தென்தாரை பீமராயர் அக்ரஹரர் பகுதியில் ஸ்ரீ சின்ன காளியம்மன் திருக்கோயில் உள்ளது.
இந்த கோவிலின் வெளி பிரகாரத்தில் மூன்று திசைகளிலும்ஸ்ரீ இந்திராணி தேவி மகேஸ்வரி தேவி வைஷ்ணவி தேவி ஆகியோரது கற்சிலைகள் சுவரில் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று இரவு கோவில் பூசாரி பிரவீன் குமார் வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு இரவு 9 மணி அளவில் கோவில் நடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இன்று காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது வெளிப்பிரகார சுவரில் இருந்த ஸ்ரீ இந்திராணி தேவியின் சிலையை மட்டும் மர்ம நபர்கள் பீடத்துடன் திருடி சென்று விட்டனர்.
சம்பவம் குறித்து தாராபுரம் போலீசில் பூசாரி பிரவீன் குமார் புகார் செய்ததை அடுத்து தாராபுரம் குற்றப் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், பொதுமக்களின் நடமாட்டம் இருந்த இரவு 9:46 மணியளவில் ஸ்கூட்டர் ஒன்றில் வந்த மர்ம நபர் கோவிலை சுற்று சுற்றி வந்ததாகவும் கோவில் திறந்திருந்த பொழுது சிவப்பு உடை அணிந்த ஒரு மர்ம நபர் கோவிலின் உள்பிரகாரத்தில் ஒளிந்து கொண்டு கோவிலின் நடை சாத்திய பின் ஸ்ரீ இந்திராணி சிலையை பீடத்துடன் பெயர்த்து எடுத்து வெளியே நின்று இருந்த நபரிடம் கொடுத்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் சிலையை திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்