தென்னக ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டுவதில் கோவை ரயில் நிலையம் 3வது இடத்தில் இருந்து வருகிறது. இருப்பினும், கோவை ரயில் நிலையம் ஏற்கனவே இயக்கப்பட்டுவந்த பல ரயில்களை இழந்துள்ளது. அதேபோல் அண்டை மாநிலங்களில் இருந்து எந்தவொரு புதிய ரயில் சேவையையும் பெறவில்லை என்பது ரயில் பயணிகளின் வருத்தமாக உள்ளது.
ஒரு நகரத்திலிருந்து புறப்படும் ரயிலில் அந்த ரயில் நிலையத்தில் இருந்து பயணிப்போருக்கு அதிக எண்ணிக்கையில் இருக்கைகள், படுக்கை வசதிகள் கிடைக்கும். ஆனால், வேறொரு இடத்திலிருந்து புறப்படும் ரயில், ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையம் வழியாக செல்லும்போது, பயணிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இருக்கைகள், படுக்கை வசதிகள்தான் கிடைக்கும்.
தென்னக இரயில்வேயின் தலைமையகமாக கோவை (போத்தனூர்) இருந்தவரை, இங்கிருந்து நிறைய ரயில்கள் இயக்கப்பட்டன. அதனால், நல்ல வருவாய் கொழிக்கும் ரயில் நிலையமாக கோவை ரயில் நிலையம் இருந்தது.
150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவை சந்திப்பு, இன்று மண்டல அல்லது கோட்டத் தலைமையகமாக இல்லாதபோதும், நாட்டின் அதிக வேக ரயில் சேவையான 13வது வந்தே பாரத் விரைவுச் சேவையைத் தொடங்க இந்திய ரயில்வேயால் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த சேவை இப்பகுதியில் உள்ள மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் உள்ளடக்கிய தென்னக ரயில்வேயில் கோயம்புத்தூர் மூன்றாவது அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக நீடிக்கிறது. கோயம்புத்தூரில் இருந்து புதிய ரயில்கள் வருவதற்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இது ரயில்வேக்கு நிறைய வருவாயைக் கொடுப்பதோடு, முக்கியமாக பொதுமக்களுக்கு நல்ல இணைப்பை வழங்கும்.
கடந்த 60 ஆண்டுகளில் கோவை, கேரளாவிற்கு இயக்கப்பட்ட பல ரயில்களை இழந்துள்ளது.
அதேபோல், பிற அண்டை மாநிலங்களிலிருந்து பல ரயில் சேவைகளையும் கோவை பெறவில்லை. அந்த வகையில், கோவை இழந்த ரயில்களின் பட்டியலை கொங்கு ரயில்வே வளர்ச்சிக் கவுன்சில் இயக்குநர் டாக்டர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி,
1) 1864 CE பெங்களூர் -கோயம்புத்தூர் மெயில் ரயிலானது, 1956 க்குப் பிறகு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ஆக மாற்றப்பட்டது. அது கொச்சி தீவு (துறைமுக முனையம்) வரை முதலில் நீட்டிக்கப்பட்டு, பின்னர் திருவனந்தபுரம் வரையும், அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி வரையும் நீட்டிக்கப்பட்டது.
2) கோவை - திருச்சி பயணிகள் ரயில் பாலக்காடு டவுன் வரை நீட்டிக்கப்பட்டது.
3) 1940 CE ஊட்டி/மேட்டுப்பாளையத்தில் இருந்து கொச்சின் (துறைமுக முனையம்) வரை இயக்கப்பட்ட டீ கார்டன் எக்ஸ்பிரஸ் இன்று எர்ணாகுளத்தில் இருந்து காரைக்காலுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது. இந்த ரயிலானது கோவையில் நள்ளிவு நேரத்தில்தான் புறப்படுகிறது. நள்ளிரவில் தான் வந்தடைகிறது. இதனால், கோவை மக்கள் வேறு வழியின்றித் தவிப்பதோடு, புதிய ரயில்களை இயக்குமாறு ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
4) கோவை வழியாக இயக்கப்பட்டுவந்த மங்களா, நேத்ராவதி மற்றும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொங்கன் பாதை வழியாக திருப்பிவிடப்பட்டன.
5) கோவையிலிருந்து ஜம்முவின் கட்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவிலை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டுவந்த நவாயுக் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
6) கோவை - பெங்களூரு இடையேயான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், அளித்த வாக்குறுதிப்படி அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் கோவை வரை நீட்டிக்க மறுக்கப்பட்டதோடு, அது அநியாயமாக மதுரைவரை வேறுபாதையில் நீட்டிக்கப்பட்டது.
7) கோயம்புத்தூர்/மேட்டுப்பாளையம் வழக்கமான வழித்தடமாக இருந்தபோதும், திருச்செந்தூர் - பொள்ளாச்சி இடையேயோன எக்ஸ்பிரஸ் ரயில் வலுக்கட்டாயமாக பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டது.
8) கோவை - ராமேஸ்வரம் இடையே ஒரே இரவில் இயக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ரயில் சேவையை மீட்டெடுக்க வேண்டும்.
9) கோவை - தூத்துக்குடி இடையிலான அதிகவேக பயணிகள் ரயில் சேவை 2009ம் ஆண்டு இருப்புப் பாதை மாற்றத்தின்போது நிறுத்தப்பட்டது. இதுவரை அந்த சேவை மீட்டெடுக்கப்படவில்லை.
10) கோவை - மதுரை சூப்பர்பாஸ்ட் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் கோவை- திண்டுக்கல் இடையேயான அதிகவேக பயணிகள் ரயில் சேவை ஆகியவை மீண்டும் தொடங்கப்பட்டால், அவை தென் மாவட்டங்களுக்கு நல்ல இணைப்பை வழங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கோவை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு, இழந்த ரயில் சேவைகளை மீட்டெடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். இழந்த ரயில் சேவைகளை திரும்பப் பெறுவதை உறுதி செய்ய ஜனநாயக ரீதியிலும், சட்டப்பூர்வமான முறையிலும் தொடர்ந்து நமது கோரிக்கைகளை பல்வேறு தளங்களிலும் எழுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.