உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவிற்காக அம்மனுக்கு சாத்துவதற்கு பட்டுச்சேலை, சீர்வரிசை தட்டுடன் வந்த பூர்வீக பள்ளி ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமியர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்ற கோவில் நிர்வாகத்தினர், அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக பட்டுசேலை மற்றும் சீர்வரிசை தட்டுடன் வந்த இஸ்லாமியர்களை கோவில் நிர்வாகத்தினர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், தேர்திருவிழாவிற்காக உடுமலை நகரமே திருவிழா கோலம் பூண்டு களைகட்டிவரும் நிலையில், உடுமலை பூர்வீக பள்ளி ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் உடுமலை நகராட்சி மன்ற தலைவர் மத்தீன் தலைமையில் அம்மனுக்கு சாத்துவதற்காக பட்டுச்சேலை மற்றும் பழங்கள் கொண்ட சீர் வரிசை தட்டுடன் கோவிலுக்கு வந்தனர்.
அப்போது, கோவில் நிர்வாகிகள் அவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். பின்னர் அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தனர்
இந்த திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, பக்தியுடன் வடம் பிடித்து தேர் இழுக்கும் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழா அனைத்து மத ஒத்துழைப்புடன் அனைவரும் கொண்டாடும் திருவிழாவாக திகழ்ந்து வருகிறது.
அதற்கு காலம் காலமாக தாங்கள் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் இந்த வருடமும் தேர்திருவிழா சிறப்படைய வாழ்த்துகளை தெரிவிக்க வந்ததாகவும் கோவிலுக்கு வந்த இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.
தேர்திருவிழா சிறக்க வாழ்த்திட வந்த இஸ்லாமியர்களின் செயலும், அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்த நிர்வாகிகளின் அன்பும், மதங்களை கடந்த மத நல்லிணக்கம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.